×

நேரத்தை வீணடித்ததற்காக நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்..அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த கோர்ட் உத்தரவு!!

சென்னை : நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அவரது மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்துகள் தெரிவித்ததாக, சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி நடிகை திரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் நடிகை திரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று கூறிய நிலையில், மன்சூர் அலிகானின் மனு குறித்து நடிகைகள் திரிஷா மற்றும் குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நடிகை திரிஷா தரப்பில், மூன்று பேருக்கும் எதிராக ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியாது என்றும், தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மன்சூர் அலிகான், குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் என்றும், தனது கருத்து எதிர்ப்பு கருத்து தான் என்றும் வாதிடப்பட்டது. மன்சூர் அலிகான் தரப்பில், மூன்று பேருக்கு எதிராகவும் ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியும் என்றும், தான் பேசிய வீடியோவை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஸ்குமார்,”மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் கூறிய கருத்தை அவதூறாக கருத முடியாது. பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு தான். நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே நடிகர் மன்சூர் அலி கானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அவரது மனுவை தள்ளுபடி செய்கிறோம். அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும்,”இவ்வாறு உத்தரவிட்டார்.

The post நேரத்தை வீணடித்ததற்காக நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்..அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த கோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Mansoor Alikan ,Iyathar Cancer Hospital ,Chennai ,Chennai High Court ,Mansour Alikan ,Mansour Ali Khan ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...